Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டப் பணிகளை மேற்கொள்ள, மின்வாரியத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேலும் 3 ஆண்டுகள் அனுமதி வழங்கி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்வாரியம் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது.
அதன்படி, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வயலூரில் 660 மெகாவாட் திறனில் 2 அலகுகள் கொண்ட மின்நிலையங்களை அமைத்து வருகிறது. ரூ.9,800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்தக் கட்டுமானப் பணிகளை முடித்து, வரும் 2022-23-ம்ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2014-ம்ஆண்டு 5 ஆண்டுகளுக்கு அனுமதிவழங்கியது. இந்த அனுமதி கடந்த 2019-ம் ஆண்டு காலாவதியானது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகள் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி காலமும் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே, கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அனுமதிக் காலத்தை மேலும் நீட்டித்து தருமாறு, மின்வாரியம் சார்பில்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதிக் காலத்தை நீட்டித்துள்ளது. கட்டுமானப் பணியின்போது அருகில் உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாதுஉள்ளிட்ட சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT