Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகில் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய கட்டிடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, வரும் 10-ம் தேதி பகல் 1 மணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அப்பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது துஷார் மேத்தா கூறும்போது, “வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா மட்டுமே நடைபெறவுள்ளது. அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டும் பணியோ, கட்டுமானப் பணிகளோ நடைபெறாது” என்றார்.

இதையடுத்து, அடிக்கல் நாட்டு விழாவை நடத்திக் கொள்ள நீதிபதிகள் அனுமதி தந்தனர். அதே நேரத்தில் கட்டுமானப் பணிகளோ, இடிக்கப்படும் பணிகளோ, மரங்களை வெட்டும் பணிகளோ நடைபெறக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x