Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைத்திருப்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு தீவிரம் காட்டவில்லை. குடிமராமத்து பணியில் பெரிய அளவில் சாதனைசெய்துவிட்டோம். அதற்காக விருது வாங்கிவிட்டோம் என்றுமுதல்வர் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த குடிமராமத்து பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது இந்த மழைக் காலத்தில் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடத்தில் பேசினால், முதல்வருக்கு கோபம் வருகிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையே இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார் என்கிறார். ஆளும்கட்சியின் தவறுகளை வெளிப்படுத்துவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். நான் அறிக்கை விடுவதை சுட்டிக்காட்டி ‘அறிக்கை நாயகர்’ என்றுஎனக்கு முதல்வர் பட்டம் கொடுத்திருக்கிறார். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். பதிலுக்கு ‘ஊழல் நாயகர்’ என்ற பட்டத்தை அவருக்கு கொடுக்கிறேன்.
ரஜினி அரசியலுக்கு வரலாம்
தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம்அமைத்திருப்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். மக்களவைத் தேர்தல் வெற்றியைப்போல பலமடங்கு வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலில் பெறுவோம்.
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியை விவாதத்துக்கு அழைத்திருக்கிறார். அவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன். அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.
அதிமுக மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறினால் பதிலுக்கு சர்க்காரியா கமிஷன், 2ஜி என்று கூறி திசைதிருப்பிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதைத்தான் ஆ.ராசா சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT