Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

ரஜினியின் ஆன்மிக அரசியல் இந்தியாவுக்கே புதிய திசையை காட்டும் தமிழருவி மணியன் நம்பிக்கை

ரஜினியின் ஆன்மிக அரசியல், இந்தியாவுக்கே புதிய திசையைக் காட்டும் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பைநேற்று வெளியிட்டார். அப்போது தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாள ராக அர்ஜுன மூர்த்தியும் நியமிக்கப்படுவதாக ரஜினி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரஜினி கட்சியின் மேற்பார்வை யாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் கூறியதாவது:

செல்வமும், செல்வாக்கும், புகழும், பெருமையும் தேடித் தந்த தமிழக மக்களுக்கு தன்னால் இயன்றவரை நன்றிக் கடன் ஆற்ற வேண்டும் என்பது தான் ரஜினியின் எண்ணமாக இருக்கிறது. அந்த பிம்பத்தின் அடிப்படையிலே தான் இன்று அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

வெறுப்பு அரசியல் வேரோடிக் கிடக்கும்இந்த தமிழகத்தில் அன்பு சார்ந்து, சாதி, மத பேதமற்று அனைவரையும் ஆரத்தழுவும் ஆன்மிக அரசியலை அவர் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே புதிய திசையை காட்டக் கூடியதாக இந்த ஆன்மிக அரசியல் அமையும்.

தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டுமக்கள் நலனுக்காக மாற்று அரசியல்இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக ரஜினி மிகப்பெரியவேள்வியில் இறங்கியிருக்கிறார். மக்கள் நிச்சயம் அவரது கனவை நனவாக்குவார்கள். அவரது இந்த வேள்வியில் என்னை முற்றாக ஈடுபடுத்திக் கொள்வேன். இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி கூறும்போது, ‘‘இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு. இந்தவாய்ப்பை வழங்கிய தலைவருக்கு நன்றி. நாங்கள் இந்த அரசியல் பயணத்தில் மாற்று அரசியலுக்கான எல்லா ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.’’ என்றார்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, தமிழகபாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக பதவி வகித்தவர்.

‘அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் முடிக்க வேண்டியதுள்ளது. அதை முடிக்க வேண்டியது என் கடமை என்று ரஜினி தெரிவித்துள்ளார். ‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு, அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x