Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழக அரசின் எண்ணற்ற நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் வாழ்த்து

சென்னை

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழவும் எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித் துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்ப தாவது:

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், நலன்களை பேணிக் காக்கும் வகையில், ஆண்டுதோறும் டிச. 3-ம் தேதி ‘அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்ந்திட, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை, கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இலவச பெட்ரோல்ஸ்கூட்டர்கள், பேருந்து பயணசலுகை, அரசுப் பணியிடங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.

மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குகுச்சிகள், மூளை முடக்குவாதநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க குரல் ஒலிப்பான், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கைக்காக ஆலோசனை வழங்குவதற்கு நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம்என்பன உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழவும், தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x