Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற விருதைதமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக மத்திய அரசிடம் பெற உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற 11-வது இந்திய உடல் உறுப்புதான தின விழாவில், உடல் உறுப்புதானத்தில் நாட்டிலேயே தமிழகம்முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழகம் தொடர்ந்து 6-வது முறையாக இவ்விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அது மட்டுமின்றி, சுகாதாரத் துறையிலும் தலைசிறந்தமுன்னோடி மாநிலமாகவும், மற்றமாநிலங்கள் பின்பற்றும் வகையிலும் தமிழகம் செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மின் விபத்தால் இரு கைகளையும் இழந்ததிண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு கடந்த 2018 பிப்.7-ம் தேதி சென்னை ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு சாதனை படைத்தது பாராட்டுக்குரியது.

ஏழை மக்களுக்கு கட்டணமின்றிசிகிச்சை செய்யப்படுகிறது. இந்தசிகிச்சைக்காக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1,392 கொடையாளர்களிடம் இருந்து 8,245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டையில் நடந்த மாரத்தானில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பங்கேற்றனர். கின்னஸ்உலக சாதனை, ஆசிய சாதனைபுத்தகங்களில் இந்த சாதனைகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளால் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தமிழகம் முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது. இதன்மூலம் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழகம் மாற்றி வருகிறது.

தமிழகத்தில் கரோனா காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி 97 உறுப்புகளை 27 கொடையாளர்களிடம் இருந்து பெற்று, தடையின்றி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது.

நாட்டிலேயே உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதை மத்திய அரசிடம் தமிழகம் பெற உறுதுணையாக இருந்த அரசு, தனியார் மருத்துவர்கள், அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x