Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

மும்பையில் பங்களா இடிப்பு விவகாரம் நடிகை கங்கனாவுக்கு நஷ்டஈடு வழங்கமும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

கங்கனா ரனாவத்

மும்பை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் பாலிவுட் திரையுலகத்தினரை நடிகை கங்கனா ரனாவத் வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பை நகர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்றார். இதனால் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும் கங்கனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா, பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியது. இதையடுத்து பங்களாவின் ஒரு பகுதி கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இடிக்கப்பட்டது.

இது சட்டவிரோதம் எனவும் இதற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா வழக்கு தொடர்ந்தார். ஆளும் சிவசேனா மற்றும் மகாராஷ்டிர அரசுக்கு எதிரான தனது கருத்து காரணமாகவே வீடு இடிக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநகராட்சியின் கட்டிட இடிப்பு உத்தரவை நேற்று ரத்து செய்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதாவது:

மும்பை மாநகராட்சியின் கட்டிட இடிப்பு உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. குடிமக்களின் உரிமைக்கு எதிராக தீய நோக்கத்துடன் மாநகராட்சி செயல்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பேச்சில் கட்டுப்பாடு

மனுதாரர் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாடுடன் பேச வேண்டும். அதேவேளையில் குடிமக்கள் கூறும் பொறுப்பற்ற கருத்துகளை மாநில அரசு புறக்கணிப்பதே சிறந்ததாகும். மனுதாரரின் கருத்து என்னவாக இருந்திருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த உத்தரவை வரவேற்றுள்ள கங்கனா, “ஒரு தனி நபர் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் அது தனி நபருக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x