Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க திமுக தயார் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க திமுக தயாராக உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும்திறனற்ற அதிமுக ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கெனவே முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக ‘இந்து’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக் கிறது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவானி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதுபோல மேலும் பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவே தகர்ந்துபோகும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால் முன்னர் அறிவித்தபடி திமுக அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x