Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரியில் டிச.1, 2, 3-ம் தேதிகளில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம்நேற்று கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் 29-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. அது 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி, தமிழக கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் டிச.1 முதல் 3-ம் தேதி வரை மழைப் பொழிவு அதிகரிக்கக்கூடும்.
கரையைக் கடந்த நிவர் புயல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது படிப்படியாக வலுவிழக்கும்.அதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT