Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல். உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் நேற்று இவர் காலமானார். (கோப்பு படம்)

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய அரசியல் ஆலோசகர்களில் ஒருவருமான அகமது படேல் (71) நேற்று காலமானார்.

அகமது படேல் கடந்த 1-ம் தேதி தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார். இதனை அவரது மகன் பைசல் படேல் அறிவித்தார்.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயை தொடர்ந்து கரோனா தொற்றால் உயிரிழந்த 2-வது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆவார். அகமது படேலின் உடல் நேற்று தனி விமானம் மூலம் குஜராத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பரூச் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தனது பெற்றோர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது அகமது படேலின் இறுதி விருப்பம் ஆகும். இதன்படி அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அகமது படேல், குஜராத்தின் பரூச் தொகுதியில் இருந்து 1977 முதல், தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1993 முதல் மாநிலங்களவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அகமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சோனியா தனது இரங்கல் செய்தியில், “ஈடு செய்ய முடியாத தோழர், நம்பிக்கைக்குரிய நண்பர், காங்கிரஸ் கட்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சக தலைவரை நான் இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x