Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுகவினருக்கு அழைப்பு

சென்னையில் மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர், திருவிக நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றுநேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிவர் புயல் காரணமாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வடிகால் இல்லாத பகுதிகள், தாழ்வான பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வட சென்னையில் எழும்பூர், பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சூளை, பெரம்பூர், திருவிகநகர், கொளத்தூர் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, ரொட்டி, உணவு ஆகியவற்றை வழங்கினார். அப்பகுதி திமுக நிர்வாகிகளிடம் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

'நிவர்' புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.

சென்னையில், திரு.வி.க. நகர்,கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவி களை வழங்கினேன்.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு அதிகரித்ததன் காரணமாக,ஏரியில் இருந்து பொதுப் பணித்துறையினர் அதிகளவில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். எனவே அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015-ம் ஆண்டு வெள்ளப்பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான திமுக நிர்வாகிகள் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஏறத்தாழ 9 மாதங்களாக கரோனா தொற்று அச்சுறுத்தி வரும்நிலையில், இந்தப் புயல் - மழைச்சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x