Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
தீயணைப்பு துறையின் ‘தீ’ கைபேசிசெயலி செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீ விபத்து, வெள்ளம், ஆழ்துளைகிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயு கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு தீயணைப்புத் துறையை எளிதில் அணுக, நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல்முறையாக தீயணைப்புத் துறையால் ‘தீ’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்புத் துறையை எளிதில் அணுக முடியும். அழைப்பு வந்த 10 விநாடிக்குள் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்துமற்றும் உதவிகோரும் இடத்துக்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களுடன் சென்று உதவவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘தீ’செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் (டேப்லெட்) அனைத்து தீயணைப்பு நிலையங்கள் மற்றும்சென்னையில் உள்ள தீக்கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்படுகிறது.
‘தீ’ செயலியின் செயல்பாட்டை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, இந்த செயலியுடன் கூடிய முதல் கைக்கணினியை தீயணைப்புத் துறை இயக்குநர் எம்.எஸ்.ஜாபர் சேட்டிடம் வழங்கினார். ‘தீ’ செயலியை மக்கள் தங்கள் கைபேசிகளில் இலவசமாகபதிவிறக்கம் செய்து விபத்து அல்லது இடர்பாடுகள் ஏற்படும்போது உடன் தகவல் தர பயன்படுத்தலாம்.
நிவாரண உதவி
மதுரை தல்லாகுளத்தில் உள்ளதுணிக்கடையில் நவ.14-ம் தேதிஏற்பட்ட தீ விபத்தில் அக்கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில்தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT