Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

தமிழகத்தில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

‘நிவர்’ புயலை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

‘நிவர்’ புயல் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

‘நிவர்’ புயல் தொடர்பான முதல்வரின் அறிவுறுத்தல்படி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை,ஊரக வளர்ச்சித் துறை சார்பில்அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்த வேண்டும். சுரங்கப்பாதைகள், தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார்மையத்தின் எண்ணும் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 77 நிவாரணமையங்கள், 2 பொது சமையலறைகளில் மக்களை தங்கவைக்கவும்,உணவு வழங்கவும் தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்பு குறைதீர்க்கும் தொலைபேசி எண் (044-45674567) செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களை தங்கவைக்க16 ஆயிரத்து 331 கட்டிடங்கள் தயார்நிலையில் உள்ளன. நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில், மாநகராட்சிகள், நகராட்சிகளில் 725 நிவாரண முகாம்கள் கண்டறி யப்பட்டு தயார் நிலையில்உள்ளன.

பேரூராட்சிகள் நிர்வாகத்தின் சார்பில் 528 பேரூராட்சிகளில் 498சமுதாயக் கூடங்கள், 662 கல்யாண மண்டபங்கள், 1,439 கல்விக் கூடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடங்கியுள்ளது. நிவர் புயல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி மக்கள் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருந்துகொள்ள வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். புயல் கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x