Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அந்நாட்டு அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த மருந்தை சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டன் மற்றும் பிரேசிலில் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட பரிசோதனையின் இடைக்கால புள்ளிவிவரப்படி, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை ஒரு மாத இடைவெளியில் 2 முறை எடுத்துக் கொள்ளும் போது 90 சதவீதம் பலன் அளிப்பது தெரிய வந்துள்ளது. கடும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவிலேயே பக்க விளைவு இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளோம். ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பாதி அளவு (முதல் டோஸ்) எடுத்துக் கொள்ளும் போது, 70.4 சதவீதமும் முழு அளவு எடுத்துக் கொள்ளும் போது 90 சதவீதமும் பலன் அளிக்கும் என்பது இடைக்கால புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த மருந்தை உலக அளவில் சப்ளை செய்ய திட்டமிட்டு வருகிறோம். 2021-ம் ஆண்டில் 300 கோடி டோஸ் சப்ளை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த மருந்தை பிரிட்ஜ் வெப்பநிலையில் வைத்தால் போதுமானது. உறைகுளிரில் (ஃப்ரீஸரில்) வைக்கத் தேவையில்லை. இதன் மூலம் தற்போதுள்ள சுகாதார கட்டமைப்புகள் மூலம் எளிதாக விநியோகிக்க முடியும். இந்த மருந்தை இயன்ற வரை விரைவாக விநியோகம் செய்ய உலகம் முழுவதும் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது எங்களின் அடுத்தகட்ட பணியாக இருக்கும். இவ்வாறு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT