Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

கரோனாவுக்கு சிறப்பான சிகிச்சைகோவை நீதிபதி பாராட்டு கடிதம்

கோவை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற (டான்பிட்) சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி கடந்த 17-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சிகிச்சை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனை மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மட்டும் நான் நன்றி கூறவில்லை. மற்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான ஆலோசனைகள், ஊக்குவிப்பு, அரவணைப்பு ஆகியவற்றுக்கும் சேர்த்தே நன்றி தெரிவிக்கிறேன். சரியான நேரத்தில் இங்கு அளிக்கப்படும் ஊசி, மருந்து, மாத்திரைகள் நோயாளிகள் விரைவில் தேற உதவுகின்றன. சிறந்த நிர்வாகம், உயர்தர மருந்துகள், சுகாதாரமான சூழல், ஊட்டச்சத்துமிக்க உணவு என தனியார் மருத்துவமனைகளைவிட இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு பணி பாராட்டுக்குரியது. கரோனாவால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்தும், அவர்கள் பணியாற்றுவது போற்றுதலுக்குரியது. எனவே, அரசு அவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றை இரட்டிப்பாக்கி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x