Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 19,647 பேர் விண்ணப்பம்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 19,647 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீக்கம், திருத்தம், இடமாற்றம் என மொத்தம் 28,134 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக் குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் டிச. 15-ம் தேதி வரை கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவ. 21, 22 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 611 வாக்குச்சாவடி மையங்களில் இதுவரை பெயர்களை சேர்க்க19,647 பேரும், நீக்கம் செய்ய 2,724 பேரும், திருத்தம் செய்ய 2,685 பேரும், முகவரி மாற்றம் தொடர்பாக 3,078 பேரும் என மொத்தம் 28,134 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் பெயர் சேர்க்க 6,029 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x