Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த 20-ம்தேதி தொடங்கினார்.

திருநீறு பூசி ஆசி

இப்பயணத்தின் 2-வது நாளான நேற்று முன்தினம் இரவு அவர், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு 27-வது குருமகா சந்நிதானம் திருநீறு பூசி ஆசி வழங்கினார். பின்னர், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை வெளியிட்டுள்ள ‘தமிழ்க் கடவுள் சேயோன்’ (முருகன் பாமாலை) என்ற நூலைதருமபுரம் ஆதீனம் வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, 1972-ல் தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது, தருமபுரம் ஆதீன மடத்தில் திமுகதலைவர் மு.கருணாநிதி, தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நினைவுப் பரிசாக வழங்கினார்.

பின்னர், 26-வது குருமகா சந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச்செய்தியை குரு மகா சந்நிதானத்திடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கைது, வழக்குப் பதிவு

பிரச்சார பயணத்தின் 3-வதுநாளான நேற்று மயிலாடுதுறையை அடுத்த திருவெண்காட்டில் இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு குத்தாலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, போலீஸார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளை கைது செய்து திருமண மண்டபம்ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர் இரவு விடுவித்தனர். மேலும், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி ராமலிங்கம்,எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் உட்பட 250 பேர் மீது குத்தாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x