Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.
கரோனா தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கோரிக்கை விடுத்தார். அதை விமர்சித்து திமுக விவசாய அணிச் செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் அறிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டார். அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நேற்று பாஜகவில் இணைந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில், கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை சி.டி.ரவி வழங்கினார்.அப்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம், ‘‘அதிமுகவில் 15 ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்து 30 ஆண்டுகள் திமுகவில் எம்.பி., எம்எல்ஏ, விவசாய அணிச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினேன். இப்போதுள்ள திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சாதாரண தொண்டனாக பாஜகவில் இணைந்துள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT