Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

மயிலாப்பூர், திருத்தணியில் திருக்கல்யாண உற்சவம் யு-டியூபில் நேரடி ஒளிபரப்பு

கபாலீஸ்வரர் கோயிலில் சிங்கார வேலருக்கும், திருத்தணியில் சண்முகருக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு முருகப்பெருமானின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. சிங்காரவேலர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

இந்நிலையில், சிங்கார வேலருக்கு நேற்று மாலை 7 மணிஅளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. கரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிஅளிக்கப்படவில்லை. எனவேஇந்நிகழ்ச்சி யு-டியூபில் ஒளிபரப்பப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.இதேபோல், பாரிமுனை அருகில்உள்ள கந்த கோட்டம் கோயிலிலும் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அங்கும் பக்தர்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை ஒட்டி, காவடிமண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதேபோல், மூலவர் முருகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரோனா அச்சம் காரணமாக, லட்சார்ச்சனை நிறுத்தப்பட்டது. விழாவின் 6-வது நாளான நேற்று முன்தினம் மாலை முருகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

இந்நிலையில், முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இணையதளம் மற்றும் யு-டியூப் மூலம் பக்தர்களுக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x