Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

75 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கல்

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான கால விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை ஆய்வு செய்து மத்திய மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையிடம் 1.50 லட்சம் தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.

இந்த தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் இதுவரை 75 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x