Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பிரச்சாரப் பயணத்தை திமுக நேற்று தொடங்கியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் திமுகஇளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இப்பயணத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இப்பயணம் குறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் நேற்று கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செய்தியை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக திமுகவின் 15 முன்னணி நிர்வாகிகள் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள் 15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து 1,500 பொதுக் கூட்டங்களில் பங்கேற்பார்கள். 500-க்கும் அதிகமான உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சத்துக்கும் அதிகமான நேரடி கலந்துரையாடல்கள் மூலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.
அதிமுக அரசின் கடந்த 10ஆண்டுகால முறையற்ற நிர்வாகம்குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது, மக்களின் குறைகள், துன்பங்கள் பற்றி நேரடியாக கேட்டறிவது, அடுத்து ஆட்சிஅமைக்கப்போகும் அரசின் மீதானமக்களின் கருத்துகள், ஆலோசனைகள், எதிர்பார்ப்புகளைக் கேட்டறிவது ஆகியவையே இந்த பிரச்சாரப் பயணத்தின் நோக்கம்.
முதல் கட்ட பயணத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் பங்கேற்பார்கள்.
2-வது கட்டமாக டிச.2-ம் தேதிதொடங்கும் பயணத்தில் துணைபொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், தேர்தல் பணிக் குழு இணை தலைவர் ராஜ கண்ணப்பன் பங்கேற்பார்கள்.
3-வது கட்டமாக டிச.11-ம் தேதி தொடங்கும் பயணத்தில் மாநில விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.செந்தில்குமார் மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT