Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

கோவையில் அரசுப் பேருந்து ஜப்தி

கோவை: கோவை வேடபட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (37). கட்டிடத் தொழிலாளி. கடந்த 2016 மார்ச் மாதம் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் சென்ற வீரமலை மீது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த வீரமலை, இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வீரமலைக்கு ரூ.10.64 லட்சம் இழப்பீடு வழங்குமாறு 2019 ஏப்ரல் 11-ம் தேதி உத்தரவிட்டது. எனினும், அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை.

இதையடுத்து, அதே நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுவை வீரமலை தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்து இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும், வட்டியுடன் சேர்த்து ரூ.13.45 லட்சம் வழங்குமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, நோட்டீஸ் ஒட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x