Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
முருகப் பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது.
இங்கு கடந்த 15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் 15 வகையான வாசனைத் திரவியங்களால் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகலில் பச்சை நாயகி அம்மன் சன்னதியில் சக்திவேல் வாங்குதல், வீர நடனம், ஆட்டுக்கிடா மற்றும் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல், சூரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மனை வதம் செய்தல், வெற்றி வாகை சூடிய முருகப் பெருமானுக்கு சேவல் கொடி சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பக்தர்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்கும் வகையில் மருதமலை அடிவாரத்தில் தடுப்புகள் வைத்து, பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்களின்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (நவ. 21) யாகசாலை பூஜைகள், கலச தீர்த்தங்களால் மூலவருக்கு அபிஷேகம், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT