Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் விவசாய நிலங்கள் பல இடங்களில் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக, அரசுக்குசொந்தமான பிஏபி வாய்க்கால் மீது பாதை ஏற்படுத்த,விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி அனுமதி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பிஏபி விவசாயிகள் கூறும்போது, "உடுமலை கிளை வாய்க்காலில் மடத்தூர் - குரல்குட்டைஇடையே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் வீட்டுமனைகளாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பாதை அமைக்க ஏதுவாக, பிஏபி கிளை வாய்க்காலின் மேல் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் துணையோடு பாலம் கட்டுவது தவறானது.
இதுகுறித்து சமூக மீட்பு இயக்கம் சார்பில்ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல, பொதுப்பணித் துறைக்கு சொந்தமானவாய்க்காலின் மேல் பகுதியில் பாலம் கட்ட எத்தனை இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம் அல்லது மக்கள் பயன்பாட்டுக்காக உள்ளதா? அல்லது வணிக நோக்கத்துக்காகவா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் கோபி கூறும்போது, "மேற்கண்ட இடத்தில் பாலம் கட்ட துறை ரீதியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, எத்தனை இடங்களில் பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு வாரத்தில் தகவல் அளிக்கப்படும்" என்றார். உடுமலை பிஏபி கிளை வாய்க்கால் மீது தனியாரால் கட்டப்பட்டுவரும் பாலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT