Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் இந்தியில் பதில் கடிதம் அனுப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்புகின்றன.
மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர், தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாழ்படுத்தும் வகையில், சிறிய இடம் கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பாஜக அரசின் மொழிவெறிப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்துக்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பாஜக அரசு மதித்து அதன்வழி நடக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT