Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

திருப்பரங்குன்றம், சோலைமலையில் சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம், கோயில் உட்பிரகாரத்திலேயே நேற்று நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணியசுவாமி கோயிலில், இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த 15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலையில் சூரசம் ஹாரம் நடந்தது. இதற்காக உற் சவர் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் புஷ்ப பல்லக்கில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்த ருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி மீண்டும் உற்சவர் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர் திருக் கல்யாணம் நடந்ததும், சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பக்தர்கள் அனுமதி இல்லை

முதல் முறையாக பக்தர்கள் அனுமதியின்றி சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்பட்டது.

சோலைமலையில்...

அழகர்கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் நேற்று சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடந்தது. இதையொட்டி, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி சூரனை வதம் செய்தார். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மட்டும் பங் கேற்றனர். இன்று காலை சுப்பிர மணியசுவாமிக்கு திருக்கல் யாணம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வுகள் இணையம் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x