Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு ராமேசுவரத்திலிருந்து படகுகள் மூலம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இலங்கையில் சமையல் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், அவற்றை தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்தக் கடத்தல் பொருட்கள் பட்டியலில் தற்போது நோய் எதிர்ப்பு மருந்துகளும் இடம் பிடித்துள்ளன.

இலங்கையில் கரோனா பரவலைத் தடுக்க 10 டன் மருந்து பொருட்களை இந்தியா சமீபத்தில் அனுப்பி வைத்தது. இந்நிலையில், மருந்துப் பொருட்கள் தட்டுப் பாட்டால், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வடக்குக் கடல் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் மிதந்த மூட்டையை மீட்டுச் சோதனை செய்தனர். அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊசி மருந்துகள் கொண்ட 6,000 குப்பிகள் இருந்தன.

இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய மூட்டை இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த அக்.18-ல் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x