Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் விற்கப்பட்ட போலி உரங்களை பயன்படுத்தியதால் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிரில் மகசூல் பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் அண்மையில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக, வேளாண்மைத்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, உரம் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், அந்த உரம் போலியானது என கண்டறியப்பட்டது.
இதையடுத்து, போலி உரத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், வேளாண்மை உர ஆய்வாளர் சவுமியா புகார் அளித்தார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த உரம் விற்பனையாளர்களான ராமலிங்கம், கார்த்திக், மொத்த உர வணிகர் சர்வேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மூவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலி உரம் பயன்படுத்தியதால் மருவத்தூர், பீல்வாடி, சித்தளி, அருமடல், ஒதியம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரிலும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT