Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த 11 மாணவர்களுக்கு அமைச்சர் நிதியுதவி

புதுக்கோட்டை: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேருக்கு பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில சீட் கிடைத்துள்ளது.

இம்மாணவ, மாணவிகள் 11 பேரையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவழைத்தார். கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை தனது சிவிபி அறக்கட்டளை மூலம் ரொக்கமாக அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் 41 சதவீதம் பேர் பயின்று வருகின்றனர். இவர்களில், கடந்த ஆண்டு 6 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் பயில சீட் கிடைத்துள்ளது. ஆனால், நிகழாண்டு கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளைச் சேர்த்து 405 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x