Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்: வேல்முருகன்

அரியலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது போல 7 பேர் விடுதலை குறித்தும் அரசாணை வெளியிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் பாமக தலைவர் ராமதாஸ் தற்போது வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பேசி வருகிறார். தேர்தல் வரும்போதுதான் வன்னிய இன மக்கள் மீது ராமதாஸுக்கு அக்கறை ஏற்படும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளிக்கும். தேர்தலிலும் போட்டியிடுவோம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில், மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது, மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதையே காட்டுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x