Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

மார்க்சிஸ்ட் அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு

விளாத்திகுளம் அருகே அயன்விருசம்பட்டி ஊராட்சி மாமுநயினார்புரத்தில் மயானத்துக்கு செல்லும் வழியில் தனிநபர் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு இதுநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரகுபதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், சூரங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சுரதா, இன்ஸ்பெக்டர் ரமேஷ், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை பெறுவதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஏற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x