Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

பொதுமக்கள் கோரும் தகவல்களை இயன்றளவு அளிக்க ஆணையர் வலியுறுத்தல்

``பொதுமக்களுக்கு கோரும் தகவல்களை சட்டத்துக்கு உட்பட்டு இயன்றளவு அளிக்க வேண்டும்” என, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரப்பெற்ற மேல் முறையீடு மனுக்கள் மீதான விசாரணை, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பொதுமக்கள் சென்னை வருவதற்கு சிரமமாக இருப்பதால் அனைத்து ஆணையர்களும், ஒவ்வொரு மாவட்டமாக சென்று விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது, தமிழக அரசு சார்பில் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்துக்கு ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இக்கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் 18 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருந்தன. தற்போது 2 ஆயிரம் மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும். பொதுமக்கள் தகவல்கள் கேட்டு அளிக்கும் மனுக்களை முழுமையாக உணர்ந்து, சட்டத்துக்கு உட்பட்டு இயன்ற உதவிகளை அலுவலர்கள் செய்யவேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கோட்டாட்சியர் மயில் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x