Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்ததால் தேனியில் அன்னதான முகாம்கள் ஒத்திவைப்பு

வெற்றிவேல்

கம்பம்

பல்வேறு கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை வெகுவாய் குறைந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அன்னதான முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வழியாகத் தான் சபரிமலை செல்வர்.

இவர்களுக்காக தேனி மாவட்ட நுழைவுப் பகுதியில் இருந்து குமுளி மலைப்பாதை வரை விவசாயிகள், ஆன்மிக ஆர்வலர்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முகாம் அமைத்து ஓய்வுக்காக இடவசதி, மருத்துவ வசதி, வாகன ஓட்டுநர்களுக்கு சுக்கு காப்பி வழங்குதல், அன்னதானம் ஆகிய சேவைகளை 24 மணி நேரமும் செய்வது வழக்கம்.

தற்போது கரோனா நடவடிக்கையாக சபரிமலையில் தினமும் ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மண்டல பூஜை தொடங்கியும் பக்தர்கள் வருகை இல்லாத நிலை உள்ளது.

எனவே தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம் உட்பட பல பகுதிகளில் அன்னதான முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேனி ஐயப்ப பக்தர் வெற்றிவேல் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகையில் இருந்து தை முதல் நாள் வரை முகாம் அமைத்து பல்வேறு சேவைகள் செய்து வருவோம். தற்போது பக்தர்கள் வருகை இல்லை. கேரள அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் கூட்டம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்களுக்கு நாங்கள் சேவை செய்ய முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x