Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி, தஞ்சை, புதுகையில் ஆர்ப்பாட்டம் மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவுட்சோர்சிங் என்ற பெயரில் மின் வாரியத்தை அரசு தனியார்மயமாக்குவதாகக் கூறி அதைக் கண்டித்தும், மின் துறை அமைச்சர் அறிவித்தபடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட 2,900 களப் பணியாளர்கள், 275 உதவி மின்பொறியாளர்கள், 500 இளநிலை உதவி மின்பொறியாளர்கள், 1,300 கணக்கீட்டாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 59 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி தென்னூரில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கிச்சான், மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர் வட்டச் செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.இளமாறன், துணைத் தலைவர் பி.அருண், நகரத் தலைவர் விக்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் உ.காதர் உசேன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.அருளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் க.ராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம்.கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டையில் பாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவர் மு.மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.சுந்தரபாண்டியன், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஆர்.தமிழழகன், திருவோணம் ஆர்.சுதாகர், சேதுபாவாசத்திரம் வி.சிவபாலன் ஆகியோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x