Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

இருசக்கர வாகனம் பரிசு விழுந்ததாக கூறி நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல் திட்டக்குடியை சேர்ந்த 2 பேர் சிக்கினர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த உமையவள் ஆற்காடு மாரியம்மன் கோயில் தெருவுக்கு கடந்த 17-ம் தேதி காரில் வந்த 5 பேர், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தவணை முறையில் பொருள் கொடுக்கும் பர்னிச்சர் கடை வைத்துள்ளதாகக் கூறி சீட்டில் சேருமாறு அங்கிருந்தவர்களிடம் கூறினர். அதே ஊரைச் சேர்ந்த செல்வம்(42) என்பவர், ரூ.500 கொடுத்து சீட்டில் சேர்ந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரில் வந்த 5 பேரும் செல்வத்துக்கு குலுக்கலில் இருசக்கர வாகனம் பரிசாக விழுந்துள்ளதாகக் கூறி மேலும் ரூ.10,500 கட்டினால் இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள னர். தன்னிடம் பணம் இல்லாததால் 2 கிராம் மோதிரம், ஒரு கிராம் தங்கக் காசை அவர் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, வாகன ஆவணங்கள் என ஒரு கவரை செல்வத்திடம் கொடுத்துவிட்டு சென்று விட்டனர். வீட்டில் சென்று பார்த்தபோது, கவரில் வெள்ளை பேப்பர் மட்டுமே இருந்தது. உடனே, தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு 5 பேர் வந்த காரை செல்வம் தேடினார். அம்மன்பேட்டை கடைவீதியில் அந்த கார் நின்றுகொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள், செல் வத்தை பார்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றனர். காரைப் பிடித்தபடி செல்வம் ஓடியதைப் பார்த்த பொதுமக்கள், காரை தடுத்து நிறுத்தினர். உடனே, காரில் இருந்த 5 பேரில் 3 பேர் தப்பியோடிவிட்டனர். காரில் இருந்த திட்டக்குடியைச் சேர்ந்த அய்யப்பன்(32), ஆசை குமார்(39) ஆகிய 2 பேரையும் பிடித்து நடுக்காவேரி போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

தப்பியோடிய 3 பேர் குறித்து பிடிப்பட்ட 2 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x