Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.
ஆனால், டெல்லியிலும் கேரளாவிலும் மட்டும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லியில் வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி, துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 45 மருத்துவர்கள், 160 மருத்துவ உதவியாளர்கள் டெல்லிக்கு நேற்று அனுப்பப்பட்டனர். டெல்லியில் உள்ள கரோனா மருத்துவமனை மற்றும் டிஆர்டிஓ மருத்துவமனையில் அவர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 800 படுக்கைகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், டெல்லி கரோனா மருத்துவமனைக்கு கூடுதலாக 250 அவசர சிகிச்சைக்கான படுக்கைகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) செய்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT