Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலில் வெளி மாநிலத்தினர் இடம்பெற்றது எப்படி? விசாரணை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

2020-21-ம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில் முதல் 10 மாணவர்களில் 2-ம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ம் இடத்தில் இருக்கிறார். தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன.

ஒரே மாணவர் எப்படி இருமாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்? அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா,ஆந்திரா, கேரளா மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்? அப்படிஇடம்பெற்றவர்கள் எப்படி தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்கள் என்பதற்கு அதிமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார், யார் அதற்கு உடந்தை என்பது குறித்தும் அவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமைச்சர் விளக்கம்

ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ‘‘திறந்தவெளி போட்டியில் யார்வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். பொதுவாகவே 2 மாநிலங்களில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. ஆனால், இருப்பிடச் சான்றிதழை ஒரு மாநிலத்தில்தான் கோரமுடியும். இருப்பிடச் சான்றிதழ் வழங்க குறைந்தபட்சம் இங்கு 7 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும், அதற்கான சான்றிதழ் வேண்டும். பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x