Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து பணியாற்றுவோம் தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் பேரம் இருக்காது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கருத்து

சென்னை

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது என்றும்,தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் பேரம் இருக்காது என்றும் தமிழககாங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்டணி வெற்றிபெற வேண்டும்

திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான, நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது. நாங்கள் அதை முக்கியமான நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விஷயங்களைவிட கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.

பிஹார் மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் காங்கிரஸை பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கெனவே பலமுறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதைப்போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிடுவோம்.

மக்கள் ஆதரவு தொடரும்

பிஹாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாக பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும்.

வாக்கு வித்தியாசம் குறையும்போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்ட காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது.

ராகுல் காந்தி பிரச்சாரம்

கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வராக்க காங்கிரஸ் கட்சி பணியாற்றும். தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x