Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகனுக்கு, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள கல்குவாரியை கனிமவளத் துறை குத்தகைக்கு அளித்துள்ளது, அண்மையில் அந்த குவாரியில் நடந்த விபத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட வானூர் போலீஸார், சம்பந்தப்பட்ட கல் குவாரி அதிமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமானது என்பதை மறைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது ஊழியர்கள் தங்களுக்காகவோ அல்லது தங்களது உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் ஒப்பந்தப் பணிகள், குத்தகைகளை பெறக் கூடாது என்பதுவிதி. ஆனால், அதிமுக எம்எல்ஏவின் மகனுக்கு கல்குவாரி கொடுத்திருப்பதால் அந்த எம்எல்ஏ தகுதி நீக்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர் ஆகிறார்.
உறவினர்களுக்கு டெண்டர் கொடுப்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான குற்றம் என்பது தெரிந்தும்கூட, தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது ஆபத்தானது. ஏற்கெனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டர் தொடர்பாக கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஏ.செல்லக்குமார் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், குவாரியை அதிமுக எம்எல்ஏவுக்கு தாரை வார்த்திருப்பது விதிகளுக்கு எதிரானது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கனிமவளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT