Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பயிற்றுவிக்க நிபந்தனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியை பயிற்றுவிக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஓர் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே 6-ம் வகுப்பில் இருந்து தமிழ் பயிற்றுவிக்கப்படும். அதற்கு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிட வேண்டும்” என்று மத்திய பாஜக அரசு நிபந்தனைகள் விதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

6-ம் வகுப்பில் இருந்துதான் தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்ற இந்த விதி, மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைக்கே விரோதமாக இருக்கிறது. இந்தியை - சம்ஸ்கிருதத்தைத் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிக்கவே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்பது கேந்திரியவித்யாலயாவின் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து உறுதியாகி விட்டது.

தமிழகத்தில் உள்ள கேந்திரியவித்யாலயா பள்ளிகள் பலவற்றுக்கு தமிழக அரசுதான் நிலம்கொடுத்துள்ளது. அங்குதான் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கே இப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுவிக்கப்பட மாட்டாது என்பதில் இருந்து, தமிழ் மீது பாசமாக இருப்பது போல் போட்ட பாஜகவின் வேஷம் கலைந்து விட்டது தெரிகிறது.

ஆகவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ்மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். தமிழாசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமித்து, மற்ற வகுப்புகள் போல் ஒவ்வொரு நாளும் தமிழ் வகுப்பு நடத்த வேண்டும்.

அதேபோல் சமையல் எரிவாயுமுன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்க வேண்டும். தமிழ்மீது அநாவசியமாக கைவைக்க வேண்டாம். மீண்டும் ஒரு போராட்டக் களத்துக்கு தமிழகத்தை தள்ளிவிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x