Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

பொய்யான பிரச்சாரங்களால் திமுகவின் வெற்றியை திசை திருப்ப முடியாது மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை

மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுகவின் வெற்றியை பொய் பிரச்சாரங்களால் திசை திருப்பிவிட முடியாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நாட்டின் ஒரே முதல்வர் பழனிசாமி, ‘தேர்தல் வழக்கு வேறுவிதமாக அமைந்தால் ஸ்டாலின் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது’ என்று பேசியிருக்கிறார். இதன்மூலம் எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டது. தோல்வி அடைந்த வேட்பாளர், என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தீர்ப்பு வந்துவிட்டது. அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை சுட்டிக்காட்டி அரசு விழாவில் முதல்வர் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கை மேற்கோள்காட்டி முதல்வர் பேசி வருவது அவர் விரக்தியில் இருப்பதையே காட்டுகிறது. திமுகவை பொறுத்தவரை வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வெற்றி பெற்று வரும் இயக்கம். சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஊழல் அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்கு. இந்த இலக்கை அடைய தினமும் மக்களிடம் செல்கிறோம். மக்கள் பணி, தமிழ்ப் பணி, தமிழர்க்கான நற்பணி, திராவிட இயக்கப் பணி ஆகியவைதான் திமுகவின் கொள்கை.

மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதிமுகவின் வெற்றியை பொய் பிரச்சாரங்கள் மூலம் திசை திருப்பிவிட முடியாது. மே மாதத்துக்கு பிறகு முதல்வரும், அவரது சகாக்களும் இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கும், முதல்வர் பழனிசாமியின் பதவிக்கும் ‘கவுன்ட் டவுன்’ மணியை மக்கள் அடித்து விட்டார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x