Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யமுதல்வர் பழனிசாமி நாளை குமரி வருகை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நாளை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மாவட்டம் வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நாளை (10-ம் தேதி) குமரி மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நாளை காலையில் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் முதல்வர் வருகிறார். அங்கிருந்து காரில் நாகர்கோவில் வரும் அவர், பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் எஸ்.பி. பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x