Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

நகைக் கடை பூட்டை உடைத்து வெள்ளி, தங்க நகைகள் கொள்ளை

கோவை: கோவை சரவணம்பட்டியை அடுத்த விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் சத்தி சாலையில் நகைக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, சந்தன கிண்ணம், கொலுசு உட்பட சுமார் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சரவணம்பட்டி குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்துக்கு போலீஸ் துப்பறியும் நாய் கொண்டு செல்லப்பட்டது. கொள்ளை நடந்த கடையிலிருந்து அங்குள்ள பள்ளிக்கூடம் வரை சென்று, அங்கிருந்து கீரநத்தம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று நாய் நின்றது. கடையில் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் தப்பின. 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாகவும் போலீஸார் விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x