Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

நடத்துபவர்கள், விளையாடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்துவித ஆன் லைன் சூதாட்டங்களை தடை செய்யவும் அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி, மாவட்ட வாரியாக சென்று கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள், அரசு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியர் கு.ராசாமணி, எம்எல்ஏக்கள் உள் ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தை பொறுத்த வரை பல ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. காந்தி புரத்தில் ரூ.214 கோடி மதிப்பில் 2 கி.மீ. தொலைவுக்கு இரண்டடுக்கு மேம் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.120 கோடி மதிப்பில் 2 கி.மீ. தொலைவுக்கு உக்கடத்திலும், ரூ.253 கோடி மதிப்பில் 3 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் சுங்கத்திலும் மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 35 கி.மீ. தொலைவுக்கு ரூ.320 கோடி மதிப்பில் மேற்கு வட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட விளையாட் டால் பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகின் றன. அதனால், ஆன்லைன் சூதாட் டத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

இதுதொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை தடை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட மக்களின் கருத்துகள் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இணைய பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுகள் அவர்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டுகளை தடை செய்யவும், அந்த விளையாட்டுகளை நடத்துபவர்கள், அதில் ஈடுபடுபவர்களை குற்றவாளி களாக கருதி கைது செய்யும் வகையிலும் உரிய சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொள்ளும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதன்படி, நடிகர் விஜய் கட்சி தொடங்குவது அவரது உரிமை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேரின் விடுதலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருகிறார். 2000-ம் ஆண்டில் திமுக ஆட்சியில், 7 பேர் விடுதலை தொடர்பான கோரிக்கை வந்தபோது, அவர்களது அமைச்சரவையில் நளினியை தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். அவர் களுக்கு தண்டனை கொடுக்கலாம் என அமைச்சரவையில் திமுகவினர் முடிவு எடுத்தனர்.

அதிமுக ஆட்சியின்போது, இந்த கோரிக்கையை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 7 பேரின் விடுதலையில் அதிமுக அரசு அக்கறையுடன் செயல் படுகிறது.

வேல் யாத்திரை

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு சட்ட ரீதியில் அனுமதி அளிக்க முடி யாது. ஊரடங்கு காலத்தில் ஊர்வலம் நடத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. அந்த சட்டத்தின்படி வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக நாங்கள் பதில் கூற முடியாது. யாரோ ஒட்டும் போஸ்டருக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

பள்ளி நிர்வாகங்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறந்தால் பாதிப்பு ஏற்படும் என பலர் கருத்து தெரிவித் துள்ளனர். எனவே, அனைத்து பள்ளி களிலும் பெற்றோர் - ஆசிரியர் கூட் டத்தை நடத்தி கருத்து கேட்கப்படும். அதில் எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

ஆய்வுப் பணி

விமான நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற முதல்வர், நேற்று இரவு அங்குள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை 9.30 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு அதிகாரிகளுடன் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறார். பல்வேறு துறை களின் சார்பில் ரூ.189.33 கோடி மதிப் பில் முடிவுற்ற 67 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்து, ரூ.131.57 கோடி மதிப்பில் 123 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 4 மணிக்கு திருப்பூர் செல் லும் முதல்வர், அங்கு ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு, ரூ.31 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.287.39 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x