Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

காவிரி டெல்டாவில் கருகி வரும் நெற்பயிர்கள் பி.ஆர்.பாண்டியன் வேதனை

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு பணிகளும், நேரடி விதைப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. களை எடுப்பு , உரமிடுகிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பயிர்கள் கருக தொடங்கி விட்டன. இதனால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடப்பாண்டு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவிக்க வேண்டும்.

கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உபரி நீரை கர்நாடக விடுவித்த அளவை ஏற்றுக் கொண்டு அதை மட்டுமே கணக்கில் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வதை ஏற்க இயலாது. இது ஒரு சடங்கு கூட்டமாக நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட வேண்டும்.

மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரின் அளவை கணக்கில் கொண்டு கர்நாடக அணைகளில் தண்ணீர் அளவையும் நேரில் பார்வையிட்டு கணக்கில் கொண்டு மாதாந்திர அடிப்படையில் நமக்கு தரவேண்டிய உரிய தண்ணீரை பெற்றுக் கொடுத்தால் தான் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x