Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

கரோனா காலத்தில் வசூலித்த வட்டி மீதான வட்டி பணத்தை கடன்தாரர்களுக்கு 5-ம் தேதிக்குள் வழங்க நிதிநிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

கரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை நிதி நிறுவனங்கள் வரும் 5-ம் தேதிக்குள் கடன்தாரர்களின் கணக்கில் திரும்ப செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்தது. இதனால் வேலை இழப்பு, வருமான இழப்புக்கு மக்கள் ஆளானார்கள். இதன் காரணமாக கடன்தாரர்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டது. இதிலிருந்து கடன்தாரர்களைக் காப்பதற்காக கடன் தவணை ஒத்திவைப்பு வசதியை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவித்தன. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்கள் இந்த வசதி வழங்கப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் நிதி நிறுவனங்கள் ஒத்திவைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டிக்கும் கூடுதல் வட்டி வசூலித்தன.

இது ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த கடன்தாரர்களுக்குக் கூடுதல் சுமையாக இருந்தது. இதனால் நிதி நிறுவனங்களின் இந்த முடிவை எதிர்த்து பலரும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவெடுக்க வேண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து அரசும் ரிசர்வ் வங்கியும் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் ஒத்திவைப்பு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறின.

இதைக் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படுத்துமாறும், மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியது. அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என அனைத்து நிதி நிறுவனங்களும் தாங்கள் வழங்கியுள்ள ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு இந்தக் கரோனா காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டி மீதான வட்டியைக் கடன்தாரர்களின் கணக்கிலேயே நவம்பர் 5-ம் தேதிக்குள் திரும்பச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நிதி நிறுவனங்கள் கடன்தாரர்களுக்கு வட்டி மீதான வட்டியைத் திரும்ப வழங்கிய பிறகு அத்தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x