Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
திமுக ஆட்சி அமைந்தவுடன் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி, இந்த ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் இருக்கும் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பணிக்கான டெண்டர் ரூ.350 கோடி மதிப்பீட்டில் விடப்பட்டுள்ளது. 60 சதவீத பணிகள் நிறைவேறியுள்ள நிலையில், இப்படியொரு விபத்து அங்கே நடந்திருக்கிறது.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டோம் என கூறிக்கொள்ளும் தமிழக அரசு, இதுபோன்ற தரக்குறைவாக நடக்கும் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷனில் ஈடுபடுவதற்காகவே என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.
புதிய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் போன்றவை கட்டுவதற்கு முறைகேடாக டெண்டர் விடப்பட்ட பணிகள் அனைத்துமே, மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும். டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர். அந்த நடவடிக்கையில் இருந்து எந்த அமைச்சரும், தேர்தல் நிதி திரட்ட இதுபோன்ற டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்க துணைபோகும் அதிகாரிகளும் தப்பிவிட முடியாது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT