Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

அனுமதியின்றி ‘ரெம்டெசிவர்’ மருந்து நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி இன்றி ‘ரெம்டெசிவர்’ மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் அனைத்தும், பல்வேறு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் ‘ரெம்டெசிவர்’, ‘ஃபவிபிரவீர்’ உள்ளிட்ட மருந்துகள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த 2 மருந்துகளையும் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இது, பெரும்பாலான உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பை மேற்கோள்காட்டி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “முறையான அனுமதி இல்லாமல் இந்த மருந்துகள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று கேட்டிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, நீதிபதிகள் எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x