Last Updated : 30 Oct, 2020 03:13 AM

 

Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

சசிகலா எப்போது விடுதலை ஆவார்?- சிறைத்துறையின் பதிலுக்காக காத்திருக்கும் டிடிவி தினகரன்

பெங்களூரு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது.

இதையடுத்து சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் அதே ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சரணடைந்தனர். மூவரின் தண்டனை காலமும் 2021-ம் ஆண்டு பிப்.14-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையின் போதே சசிகலா சில மாதங்கள் சிறையில் இருந்துள்ளதால் அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதுஎன சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, சசிகலா விடுதலை தேதி குறித்து தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ்கடந்த மாதம் கேள்வி எழுப்பினார். அதற்கு சிறையின் கண்காணிப்பாளர் லதா, ‘‘சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது''என பதில் அளித்தார்.

இதையடுத்து, டிடிவி தினகரன் தரப்பினர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறைத்துறையில் சசிகலாவுக்கு அபராதம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விசாரித்துள்ளனர்.

மேலும் சிறை விதிமுறையின்படி எத்தனை நாட்கள்சசிகலாவுக்கு சலுகை வழங்கப்படும்? அதன்படி சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என சிறை கண்காணிப் பாளரிடம் கேட்டுள்ளனர். இதற்குசிறைத்துறை 30 நாட்களுக்கும் மேலாக பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. அதேபோல கரோனா பரவலை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சசிகலாவை சந்திக்கவும் அனுமதி மறுப்பதால் டிடிவி தினகரன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிற‌து.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் சிறைமுறைக்கேட்டை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா தற்போது கர்நாடக உள்துறை செயலாள‌ராக இருக்கிறார். சசிகலாவின் விடுதலை தேதி உள்ளிட்ட விவகாரங்களை அவர் கண்காணிப்பார். அதேபோல கர்நாடக அரசும் இதில்மறைமுகமாக தலையிட வாய்ப்பு உள்ளது. இதனால்சசிகலா வெளியே வருவது தாமதமாகி வருவதாக அவருக்கு நெருக்கமானோர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, ''கடந்த 6 மாதங்களாக சசிகலாவின் விடுதலைக்காக காத்திருக்கிறோம். அபராதம் செலுத்துவது உள்ளிட்ட சட்ட ரீதியான எல்லா ஏற்பாடுகளும் 90 சதவீதம் முடிந்துவிட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x