10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யலாம்: ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து கடந்த மாதம் எலான் மஸ்க் பேசியிருந்தார். அப்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதலே புதுப்புது அப்டேட்களை அவர் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த சூழலில் இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது ‘ட்விட்டர் ப்ளூ’ பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. இவர்கள் ப்ளூ டிக் பெற்ற பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ப்ளூ சேவையை பெற பயனர்கள் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது. வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என இதன் மாதாந்திர சந்தா உள்ளது. இதை பயனர்கள் செலுத்துவதன் மூலம் விளம்பர இம்சைகள் இல்லாமல் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியுமாம். மேலும், ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும் எனவும் தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in